பதிவு செய்த நாள்
03
மார்
2025
05:03
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் காலை 7 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபட்டு கோவில் முன் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
கொடிமரம், நாணல்புல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம்பொரித்த கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவின் போது நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா,கோவில் செயல்அலுவலர் திருஞானசம்பந்தன் உள்ளிட்ட பரம்பரை கோவில் பூசாரிகள், விழாக்குழுவினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று செவ்வாய்கிழமை அதிகாலையில் நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து சந்தன கருப்புசுவாமி கோவிலில் பக்தர்கள் ஒன்று கூடுவர். பின்னர் அங்கிருந்து பக்தர்களை ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவர்.தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வரும் மார்ச் 18ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், திருக்கோவில் பரம்பரை பூசாரிகளும் செய்து வருகின்றனர்.