பதிவு செய்த நாள்
03
மார்
2025
05:03
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பிரம்மோற்சவம் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
உற்சவத்தையொட்டி தினமும் காலை, மாலையில், காமாட்சியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். அதன்படி, முதல் நாள் உற்சவமான இன்று காலை, கொடியேற்றத்தை தொடர்ந்து, காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இரவு தங்க மான் வாகன உற்சவம் நடக்கிறது. நாளை காலை மகரத்திலும், இரவு சந்திர பிரபையிலும், நாளை மறுநாள் காலை, தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வருகிறார். இதில், ஒன்பதாம் நாள், வெள்ளி ரதம் உற்சவம், வரும் 11ம் தேதி இரவு விமரிசையாக நடக்கிறது. பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஆதீன பரம்பரை கர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் ராஜலட்சுமி, கோவில் மணியகாரர் சூரியநாராயணன், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செய்துள்ளனர்.