பதிவு செய்த நாள்
05
மார்
2025
03:03
மணலி; மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியின்193ம் ஆண்டு அவதாரதிருநாள், நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி பக்தர்கள், பழைய வண்ணாரப்பேட்டை, ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் இருந்து, அய்யா அருளிச் செய்த அகில திரட்டு ஆகமத்தை பல்லக்கில் வைத்து சுமந்தபடி, ஊர்வலமாக சென்றனர். அதிகாலை 5:30 மணியளவில் புறப்பட்ட ஊர்வலத்தை, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் துவங்கி வைத்தார். ஊர்வலத்தில், திருநாமக்கொடி ஏந்தியபடி பக்தர்கள் திரளாக பங்கேற்று, அய்யாவின் நாமத்தை உச்சரித்தபடி, சாரட் வண்டியின் பின், 15 கி.மீ., துாரம் பாதயாத்திரை சென்றனர். ஊர்வலம் நல்லப்பவாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக, பகல் 12:00 மணியளவில், மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைந்தது. ஊர்வலம் செல்லும் வழியெங்கும் பக்தர்களுக்கு சிற்றுண்டி, நீர், மோர் வழங்கினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் ஊஞ்சல்சேவை, தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை மற்றும் அய்யா தொட்டில் வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. பின், வைகுண்ட ஜோதி ஏற்றுதல், இனிமம் வழங்குதல் நிகழ்ச்சியுடன், அய்யா அவதார திருநாள் நிறைவடைந்தது.