பதிவு செய்த நாள்
10
மார்
2025
03:03
மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
சோத்துப்பாக்கம் கிராமத்தில் அஞ்சூரம்மன் கோவில் அருகே பழமையான பாலமுருகன் கோவில் உள்ளது. கோவில் புணரமைப்பு பணிகள் செய்ய விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் முடிவு செய்து, திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பாலமுருகன், பக்த ஆஞ்சநேயர், பரிவார மூர்த்திகள் மற்றும் நவகிரக தெய்வங்களின் கோவில், கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுற்று, மஹா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, யாகசாலை அமைக்க பந்தக்கால் நடப்பட்டது. கடந்த 7ம் தேதி காலை 8:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாடு, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம், காலை 8:30 மணி அளவில், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், கோபுர கலசம் பதிய வைத்தல், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், பாலமுருகன் சிலை பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு மங்கல இசை, நான்காம் கால யாகசாலை பூஜைகள், விசேஷ திரவிய ஹோமம், நாடி சந்தனம், தத்வார்ச்சனை, ஸ்பருஷாஹூதி, நாமகரணம், தம்பதி சங்கல்பம், கலச புறப்பாடு நடந்தது. காலை 10:15 மணிக்கு, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், விமான கோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 10:30 மணிக்கு மூலவர் பாலமுருகன், பக்த ஆஞ்சநேயர், பரிவார மூர்த்திகள் மற்றும் நவகிரகங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மஹா அபிஷேக அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. இரவு, வானவேடிக்கையுடன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், பாலமுருகன் வீதி உலா நடந்தது. இன்று முதல் 48 நாட்கள் தினமும் மண்டலாபிஷேக பூஜை நடைபெறும்.