விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2025 12:03
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளத்தில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டு மாசிமக திருவிழா கடந்த 11ம் தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 21ம் தேதி ஆழத்து விநாயகர் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மார்ச் 3ம் தேதி விருத்தாம்பிகை பாலம்பிகை சமேத விருத்தகிரீஸ்ரவர் சுவாமிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மார்ச் 8ம் தேதி 6ம் நாள் உற்சவமாக வெள்ளி ரிஷப வாகனத்தில் விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மார்ச் 11ம் தேதி கோலாகலாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்தில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். நாளை 12ம் தேதி மாசிமகம், 13ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. வரும் 14ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம், வரும் 15ம் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்பரம், வரும் 24ம் தேதி விடையாற்றி உற்சவம் நிறைவுடன் மாசிமக பெருவிழா நிறைவடைகிறது.