பதிவு செய்த நாள்
11
மார்
2025
12:03
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று பெட்டத்தம்மன் மலையிலிருந்து அம்மனை கோவிலுக்கு அழைத்து வந்தனர். இதை தொடர்ந்து, இன்று அதிகாலை 4.00 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவருக்கு திருமஞ்சணம் பூஜை செய்யப்பட்டது. பின், திருமணக் கோலத்தில் உச்சவ மூர்த்தி அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண உற்சவ சடங்குகள் நடந்தன. புண்ணிய வாகம் முடிந்த பின், அரங்கநாதப் பெருமாளுக்கு பூணுால் அணிவித்து, கங்கணம் கட்டி, குலம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி பாலாஜி சுவாமிகள், வேதவியாச சுதர்சன பட்டர் சுவாமிகள் ஆகியோர் மஞ்சள் இடித்து, மாங்கல்யா பூஜைக்கு கொடுத்தனர். அரங்கநாதப் பெருமாளின் சார்பாக அர்ச்சகர்கள் திருமாங்கல்யத்தை ஸ்ரீதேவி, பூதேவிக்கு அணிவித்தனர். பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள், தாலி கயிறு ஆகியவை வழங்கப்பட்டன. நாளை அதிகாலை, 5:30 மணிக்கு அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.