பதிவு செய்த நாள்
17
மார்
2025
11:03
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சேஷ வாகனத்தில் தெப்பத்திருவிழா நடந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், காரமடை அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு தோலம்பாளையம் சாலையில் உள்ள கோவிலின் தீர்த்த தெப்பக்குளத்திற்கு அழைத்து சென்றனர். குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து இருந்த தெப்பத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார். அப்போது தேரில் மங்கல வாத்தியங்கள் இசை முழங்க, தேர் தெப்பக்குளத்தை சுற்றி சுற்றி ஆடி, அசைந்து வந்தது. தெப்பக்குளத்தை சுற்றி நின்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் இக்காட்சியை கண்டு ரசித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.