சென்னை; திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரர் கோவிலுக்கு, 72.80 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு வடம்பிடித்து துவக்கி வைத்தார். பின், பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரர் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு சொந்தமான மரத்தேர், 40 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்தது. இந்த நிலையில், 72.80 லட்சம் ரூபாய் செலவில், புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. திருவேட்டீஸ்வரர் கோவில் அர்த்த ஜாம பூஜைக்கு, தினமும் ஆற்காடு நவாப் வம்சத்தினரால் பால் வழங்கப்பட்டு வரும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துகிற இக்கோவிலின் திருப்பணிகள், விரைவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சேகர் பாபு கூறினார்.