பதிவு செய்த நாள்
20
மார்
2025
10:03
ஊட்டி; ஊட்டி மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோவிலில், கூரை வேயும் திருவிழா நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில், தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய, 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அதில், தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில், 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது. இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல்பகுதியில் உள்ள மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடி மக்களின் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை, 9 ஆண்டு களுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக கோரக்குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட வனங்களில் கிடைக்க கூடிய மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் ஒரு வகை புல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். தொடர்ந்து, தங்களின் பாரம்பரிய உடையணிந்து கூரை வேய்ந்தனர். அதன்பின் நேற்று மாலை கோவில் முன்பு அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த கோவில் பணிகளை ஆண்கள் மட்டுமே மேற்கொள்வது வழக்கம். நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி.,நிஷா ஆகியோர் பங்கேற்றனர்.