பதிவு செய்த நாள்
29
மார்
2025
04:03
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, 50க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தட்டுகளில் பூக்களை சுமந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.
முத்தால பரமேஸ்வரி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் பங்குனி விழாவின் முன்னோட்டமாக பூச்சொரிதல் விழா நடக்கிறது. நேற்று மாலை 6:00 மணி தொடங்கி நகரின் பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மேடை அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூத்தட்டுகளை வைத்திருந்தனர். பின்னர் ஒவ்வொரு இடத்திலும் மேளதாளம் முழங்க, கச்சேரிகள் நடந்தது. தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் வெகு விமரிசையாக பூத்தட்டுகள் புறப்பட்டு கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கு மல்லிகை, ரோஜா, தாமரை என அனைத்து வகையான மலர்களையும் வைத்து அம்மன் இரவு அலங்கரிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை 11:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு பூக்கள் அனைத்தும் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏப்.,3 துவங்கி பங்குனி விழா கொடியேற்றத்துடன் நடக்க உள்ளது. முக்கிய நிகழ்வாக ஏப்.,11 இரவு 8:10 மணிக்கு அம்மன் மின் அலங்கார தேரில் மாடவீதிகளில் உலா வருகிறார்.