பதிவு செய்த நாள்
01
ஏப்
2025
04:04
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பினை அமுல்படுத்துவதா? அல்லது மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து அரசு வழக்கறிஞரிடம் கலந்து ஆலோசிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
இக்கோயிலில் தற்போது அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதித்து வருகிறது. இங்கு தினமும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில், தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், இரவில் யாரேனும் மலையில் தங்கினால் அவர்களை கைது செய்யவும், பாலிதீன், பிளாஸ்டிக், எளிதில் தீப்பற்றும் பொருட்களை தடை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது சதுரகிரி பக்தர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எப்போது முதல் பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது விடுமுறை நாட்களில் வெளி மாவட்ட பக்தர்கள், தாணிப்பாறை வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்தி தினமும் பக்தர்களை அனுமதிக்கலாமா அல்லது நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி மேல்முறையீடு செய்யலாமா என வனத்துறை கருதுகிறது. இதற்காக அரசு வழக்கறிஞரிடம் கலந்து ஆலோசிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.