அவிநாசி; சேவூர் சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது. அவிநாசி அடுத்த சேவூரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 30ம் தேதி கம்பம் நடுதல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. நேற்று அம்மை அழைத்தல் நிகழ்ச்சியில் சேவூரில் உள்ள ராஜவீதி, கோபி மெயின் ரோடு, வடக்கு வீதி,ஐஸ் கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக மாவிளக்கு எடுத்து வந்து சக்தி மாரியம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பூவோடு எடுத்து பக்தர்கள் குண்டம் இறங்கினர். இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. பூச்சாட்டு விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் நீர்மோர் ஆகியவை விழா கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது.