பதிவு செய்த நாள்
18
ஏப்
2025
01:04
திருப்பூர்; கிறிஸ்தவர்களின் தவக்கால அனுசரிப்பின் புனித நாட்கள் பெரிய வியாழன் நிகழ்வுடன் நேற்று துவங்கியது. இன்று புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த நாளை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும், 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். கடந்த மாதம், 5ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தவக்காலம் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சிலுவைப்பாதை ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேற்று, தவக்கால நிகழ்வின் முக்கிய நாட்களின் துவக்கமான, புனித வியாழன் அனுசரிக்கப்பட்டது. ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்படுவதற்கு முன், தன் சீடர்களின் பாதங்களை கழுவினார். இதை உணர்த்தும் வகையில், தேவாலய குருக்கள், 12 பேரை சீடர்களாக அமர வைத்து, அவர்களின் பாதங்களை கழுவினர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்ட நாளை நினைவு கூரும் வகையில், இன்று, புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. ஏசுவின் சிலுவை பாடுகள், அவை உணர்த்தும் நற்செய்தி குறித்த ஆராதனை, தேவாலயங்களில் நடத்தப்பட்டது. நாளை மறுநாள் ஏசுவின் உயிர்ப்பை நினைவுகூரும் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது. திருப்பூர் புனித கத்தரீனம்மாள் தேவாலயம், குமார் நகரிலுள்ள புனித ஜோசப் தேவாலயம், அவிநாசி புனித தோமையார் தேவாலயம் உள்ளிட்ட கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.