நத்தம், நத்தம் அருகே குட்டூரில் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து நேற்று காலையில் வருடாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க அனுக்கை, விக்னேஷ்வரபூஜை, பூர்ணாகுதி தீபாராதனைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், மஹா தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார மற்றும் வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் மணிமாறன் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.