அவிநாசி: அவிநாசி அருகிலுள்ள கருவலுாரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக, நேற்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, கோவில் அறங்காவலர்கள், ஊர் பிரமுகர்கள் தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேர் நிலையிலிருந்து கிழக்கு வீதி வரை தேர் நிறுத்தப்பட்டது; இன்று கிழக்கு வீதியில் இருந்து மேற்கு வீதி வரையிலும் தேர் வலம் வருகிறது. நாளை தேர் நிலை சேர்க்கப்படும். தொடர்ந்து 4ம் தேதி பரிவேட்டை, குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகன காட்சி, 5ம் தேதி மஹா தரிசனம், இரவு மஞ்சள் நீர், அன்னவாகன காட்சி, கொடி இறக்கம் ஆகியவை நடைபெறுகிறது. வரும் 8ம் தேதி மறு பூஜை, பாலாபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவற்றுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.