பதிவு செய்த நாள்
30
ஏப்
2025
07:04
சென்னை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இன்று 30ம் தேதி, அட்சய திருதியை நாளில் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்கினார்.
காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 70வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அட்சய திருதியையான இன்று காலை 6:00 மணியில் இருந்து, 7:30 மணிக்குள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தத்தில், இளைய மடாதிபதியான, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவிற்கு 71 வது மடாதிபதியாக சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்கினார். சன்யாச ஆசிரம தீட்சை காஞ்சி காமாட்சி அம்பாள் கோவில் திருக்குளத்தில் நடைபெற்று வருகிறது. சன்யாச தீட்சைக்கான வழிபாடுகள் காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. வேத மந்திரம் முழங்க காலை 6:30 மணிக்கு சன்யாச தீட்சை வழங்கினார் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தொடர்ந்து இளைய மடாதிபதி தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்ததால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்கள் செய்தார். காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீகணேச சர்மாவுக்கு, சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று, பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர் சூட்டினார். தொடர்ந்து பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
தொடர்ந்து காலை 8.00 மணி முதல் 9.00 வரை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சந்நிதி மற்றும் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் சந்நிதியில் தரிசனம் மற்றும் விஷேஷ பூஜைகள் நடக்கிறது. காலை 9.00 மணி முதல் 10.00 மணி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் இருந்து ஸ்ரீமடத்திற்கு ஊர்வலம் துவங்கி, ஸ்ரீமடத்தில் ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரி சமேத சந்திரமௌலீஸ்வர சுவாமி சந்நிதியில் தரிசனம் நடக்கிறது.
காலை 10.00 மணி முதல் தரிசனம் மற்றும் பூஜைகள் நடக்க உள்ளது. ஸ்ரீ சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியார் சந்நிதி, பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிஜி மற்றும் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் பிருந்தாவனத்தில் தரிசனம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பிருந்தாவன் மண்டபம் மேடைக்கு சுவாமி வருகை தந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு கோவில்களில் இருந்து சிறப்பு பிரதிநிதிகள் மூலம் பிரசாதங்கள் பெறப்படுகிறது. காலை 11.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜை, பிக்ஷாவந்தனம் மற்றும் பாத பூஜை சமர்ப்பணம், மாலை 5.00 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் நடைபெறும், இரவு 7.30 மணிக்கு சந்திரமௌலீஸ்வர பூஜை நடைபெறுகிறது. விழாவில் ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.