பதிவு செய்த நாள்
30
ஏப்
2025
07:04
காஞ்சிபுரம்: 2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இன்று (ஏப்.30ம் தேதி), அட்சய திருதியை நாளில் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்கினார்.
தீட்சை வழங்கும் நிகழ்ச்சி; காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய பீடாதிபதிக்கு தீட்சை வழங்கும் வழிபாடுகள் காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. காலை 6:00 மணியில் இருந்து, 7:30 மணிக்குள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தத்தில், இளைய மடாதிபதியான, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவிற்கு 71வது மடாதிபதியாக சன்யாச தீட்சை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தீர்த்த அபிஷேகம்; தீட்சை பெறுவதற்கு முன்பு திருக்குளத்தில் இறங்கிய கணேச சர்மா தனது கடுக்கண், மோதிரம், பூணூால், அரைஞான் கயிறு ஆகியவற்றை துறந்தார். அதன் பின் வேத மந்திரம் முழங்க காலை 6:30 மணிக்கு சன்யாச தீட்சை வழங்கினார் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தீட்சை வழங்கிய பிறகு காவி வஸ்திரம், கமண்டலம், தண்டத்தை ஸ்ரீகணேச சர்மாவுக்கு விஜயேந்திரர் வழங்கினார். தொடர்ந்து இளைய மடாதிபதி தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்ததால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்கள் செய்தார். பின்னர், இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசித்தனர். அப்போது, காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதிக்கு ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர் சூட்டினார். பின்னர் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
சந்நிதியில் தரிசனம்; தொடர்ந்து காலை 8.00 மணி முதல் 9.00 வரை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சந்நிதி மற்றும் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் சந்நிதியில் தரிசனம் மற்றும் விஷேச பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் இருந்து ஸ்ரீமடத்திற்கு ஊர்வலம் துவங்கியது. மடம் வந்தடைந்ததும் ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர சுவாமி சந்நிதியில் தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பீடாதிபதிகள், ஸ்ரீ சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியார் சந்நிதி, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிஜி மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்தனர். பிருந்தாவன் மண்டப மேடைக்கு சுவாமிகள் வருகை தந்தனர். வேத மந்திரம் முழங்க காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவருக்கு சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு கோவில்களில் இருந்து வந்த பிரசாதங்களை சுவாமிகளுக்கு வழங்கப்ட்டது.
பக்தர்களுக்கு தரிசனம்; காலை 11.30 மணி முதல் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜை, பிக்ஷாவந்தனம் மற்றும் பாத பூஜை சமர்ப்பணம் நடந்தது. மாலை 5 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் நடைபெறும், இரவு 7.30 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜை நடைபெறுகிறது. விழாவில் தமிழக கவர்னர் ரவி, ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிறப்பு ஏற்பாடுகள்; சன்யாச தீட்சை வழங்கும் நிகழ்ச்சியை காண வந்தவர்கள் கோவில் தெற்கு வாசல் வழியாக வந்து, நவராத்திரி மண்டபம் வழியாக மாடத்துக்கு வந்து, அங்கிருந்து திருக்குளத்தில் நடந்த நிகழ்ச்சிகளை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர் மாடத்தில் 3 அகண்ட திரைகள் வாயிலாகவும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் ஆகியோருக்கு திருக்குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த நகரும் தெப்பத்தில் அமந்து நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், கச்சபேஸ்வரர் கோவில், பஜனை மண்டபம், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கர மடம் உள்ளிட்ட இடங்களில் இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பெயரில் டிராவிட் ஏன்?: புதிய பீடாதிபதிக்கு பெற்றோர் வைத்த பெயரின் கடைசியில் டிராவிட் என்ற வார்த்தை இருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு குடி பெயர்பவர்கள், தங்கள் பெயருடன் டிராவிட் என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொள்வர்.