பதிவு செய்த நாள்
15
மே
2025
02:05
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் காலை உத்சவத்தில், தங்க சப்பரத்திலும், மாலை, சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரண்டாம் நாள் உத்சவமான, கடந்த 12ம் தேதி, காலை ஹம்ஸ வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் உலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான கடந்த 13ம் தேதி காலை கருடசேவை உத்சவமும், மாலை அனுமந்த வாகன உத்சவமும் நடந்தது.
நான்காம் நாள் உத்சவமான நேற்று காலை, சேஷ வாகனத்தில், பரமபதநாதன் திருக்கோலத்திலும், இரவு சந்திர பிரபையிலும், ஐந்தாம் நாள் உத்சவமான இன்று காலை தங்க பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்தில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆறாம் நாள் உத்சவமான நாளை காலை, தங்க சப்பரத்தில், வேணுகோபாலன் திருக்கோலத்திலும், மாலை யானை வாகனத்திலும் வரதராஜ பெருமாள் உலா வருகிறார். இதில், ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம் 17ம்தேதி காலை 6:00 மணிக்கு நடக்கிறது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருகிறார்.பிரம்மோத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.