ஸ்ரீவில்லிபுத்துார்: ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து ஆற்றில் இறங்குவது வழக்கம்.
இதற்கு எதிர் சீராக மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் கொடுத்து அனுப்புவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஆண்டாளுக்கு பட்டு, மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு சாற்றும் வைபவம் நேற்று இரவு 7:40 மணிக்கு நடந்தது.
இதனை முன்னிட்டு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்திருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு கள்ளழகர் கொடுத்து அனுப்பிய பச்சை பட்டும், ரெங்கமன்னாருக்கு பரிவட்டமும் சாற்றப்பட்டு, மங்களப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளை ஸ்ரீவாரி பிரபு பட்டர் செய்தார்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.