வாலாஜாபாத்; வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழையசீவரம் கிராமம். இக்கிராமத்தின் மலை மீது ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான லட்சமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று பார்வேட்டை விழா கோலாகலமாக நடக்கும். அப்போது, காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் ஊர்வலமாக வந்து லட்சுமி நரசிம்ம சுவாமியோடு சந்தித்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரதராஜ பெருமாள், மலைக் கோவிலுக்கு வருவதற்கு முன்னதாக, மலையடிவாரத்தில் உள்ள தனி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். அப்போது, அங்கு சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெறும். மலையடிவாரத்தில் உள்ள இந்த மண்டபம், சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து, கோவில் கட்டட பகுதியும் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. மேலும், மண்டபத்தைச் சுற்றிலும் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. எனவே, பழையசீவரம் மலையடிவாரத்தில் உள்ள மண்டபத்தை புனரமைத்து மண்டபத்தை சுற்றி சூழ்ந்துள்ள முட்புதரை அகற்றி வழிபாட்டிற்கு கொண்டுவர அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.