பதிவு செய்த நாள்
21
மே
2025
05:05
சோழவரம்; சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், 2,000 ஆண்டுகள் பழமையான காமாட்சி அம்பாள் உடனுறை வரமுக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிதிலமடைந்ததை தொடர்ந்து, கடந்த 2015ல் திருப்பணிகள் துவங்கப்பட்டன. இங்குள்ள பாலமுருகன், குபேர விநாயகர், தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய சன்னிதிகள் ஒவ்வொன்றாக புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிந்தன. தற்போது, 54 லட்சம் ரூபாயில் ராஜகோபுரம் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது, நான்கு நிலைகளை கொண்ட, 165 அடி உயரம் உடையது. இதில், 216 சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சிமென்ட் பயன்படுத்தாமல் சுண்ணாம்பு, கடுக்காய் உள்ளிட்டவைகளை கொண்டு, அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் ராஜகோபுர திருப்பணிகள் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: இக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்த வாயு தலமாகும். இங்கு, சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. கருவறை தீபம் கமலதீபமாக காட்சியளிக்கிறது. சித்தர்கள் தவமிருந்த தலம் என, கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக கோவில் சிதிலமடைந்து, தற்போது திருப்பணிகள் நடக்கிறது. தற்போது, நிதி ஆதாரம் தான் பிரச்னையாக இருக்கிறது. பக்தர்கள் முன்வந்து திருப்பணிகளுக்கு உதவி செய்தால், விரைவாக பணிகளை முடித்துவிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.