வைகாசி சதய விழா; திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2025 10:05
மயிலாடுதுறை; திருவிடைக்கழி அருள்மிகு தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி சதய திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகாவில் அமைந்துள்ளது திருவிடைக்கழி சுப்பிரமணியசுவாமி முருகன் கோயில். தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாகமாகவும், சோழநாட்டு திருச்செந்தூர் என்றும் போற்றப்படுகிறது. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பின்னர் மாயையால் தரங்கம்பாடி கடலில் மறைந்திருந்த சூரனின் இரண்டாவது மகனான இரணியாசூரனை வதம் செய்து சாப தோஷம் ஏற்பட, திருவிடைக்கழி தலத்தில் முருகப்பெருமான் சிவனை பூஜித்து தனக்கு ஏற்பட்ட சாபதோஷம் நீங்க பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழில் போற்றிப் புகழப்பட்டுள்ள இக்கோவில் முருக பெருமானும், சிவபெருமானும் ஒன்று என்ற தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே திருத்தலமாகும். இங்கு சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே கருவறையில் எழுந்தருளி உள்ளதால் முருக பெருமான் சிவ சொரூபமாக காட்சி அளிக்கிறார். சிறப்புமிக்க இக்கோயிலில் வைகாசி சதய திருவிழா பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் திருநாளான இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் பிரகாரம் மண்டபத்திற்கு எழுந்தருளினர். பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து காப்பு கட்டி ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல் கன்னிகாதானம் செய்யப்பட்டு மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. தொடர்ந்து பூரணாஹூதி செய்யப்பட்டு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு பஞ்சமுக தீபாராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.