பாகூர்; பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் இன்று 108 கலசாபிஷேகம் நடந்தது. பாகூரில் உள்ள வேதாம்பிகை சமேத ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திரத்தையொட்டி, கடந்த 4ம் தேதி முதல் மூலநாதர் சுவாமிக்கு தாராபிஷேகம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக நன்மை வேண்டி, சென்னை மணிமங்கலம் படப்பை புஜ்ஜியஸ்ரீ முரளிதர சுவாமிகளின் அருளாசியுடன் இன்று ஸ்ரீமூலநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி, காலை 7:30 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, 11 முறை ருத்ரபாராயணம், விசேஷ ஹோமங்கள் நடந்தது. 10:00 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் செய்து, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.