பதிவு செய்த நாள்
27
மே
2025
05:05
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திருவேதிகுடியில், வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை பலர் குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1981ம் ஆண்டு முதல் 44 ஆண்டுகளாக ஷேக்தாவூத் என்பவர், நஞ்சை நிலத்தில் சாகுபடி செய்து வந்தார். ஆனால், கோவிலுக்கு செலுத்த வேண்டிய உரிய குத்தகை தொகையை செலுத்தாமல் இருந்து வந்தார். இதையடுத்து, கோவில் நிர்வாகம் நிலத்தை மீட்கும் முயற்சியாக, தஞ்சாவூர் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், குத்தகை வழங்காதவரிடமிருந்து நிலத்தை மீட்க கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதன்பேரில், தஞ்சாவூர் வருவாய் நீதிமன்ற ஆய்வாளர் புவனேஸ்வரி, வருவாய்துறையினர் இணைந்து 3.21 ஏக்கர் நிலத்தை மீட்டு, கோவில் அறங்காவலர் வெங்கடாஜலம், செயல் அலுவலர் ராஜரத்தினம், கோவில் எழுத்தர்கள் பஞ்சநாதன், செந்தில்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு, அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகை அங்கு வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, சுமார் இரண்டு கோடி ரூபாய் என வருவாய்துறை அதிகாரிகள் கூறினர்.