பதிவு செய்த நாள்
02
ஜூன்
2025
10:06
புதுடில்லி; முதல்வர் ரேகா குப்தா, இரண்டு நாள் பயணமாக குடும்பத்துடன் நேற்று, உத்தராகண்ட் சென்றடைந்தார். டில்லியில் நேற்று அதிகாலை புறப்பட்ட ரேகா குடும்பத்தினர், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் சென்றனர். நேற்று காலையில், கங்கை நதியில் புனித நீராடினர். அதைத் தொடர்ந்து, ஹரித்வாரில் ஒரு தர்மசாலாவைத் முதல்வர் ரேகா திறந்து வைத்தார். மாலையில், ரிஷிகேஷ் சென்ற ரேகா மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு நடந்த கங்கா ஆரத்தியில் பங்கேற்று வழிபாடு செய்தனர். இரவு ரிஷிகேஷில் தங்கினர். இன்று காலை கேதார்நாத் கோவிலில் நடக்கும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கின்றனர். டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்று கடந்த 30ம் தேதி நுாறு நாட்கள் நிறைவடைந்தன. அதை முன்னிட்டு, புதுடில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில், டில்லி அரசின் நூறு நாள் சாதனைகள் குறித்து ரேகா விரிவாக பேசினார். இந்நிலையில், அவர் குடும்பத்தினருடன் இரண்டு நாள் ஆன்மிக பயணம் சென்றுள்ளார்.
வாகனங்கள் மோதல்; முதல்வர் ரேகா குப்தா நேற்று அதிகாலையில், ஷாலிமர் பாகில் உள்ள தன் வீட்டில் இருந்து குடும்பத்துடன் உத்தராகண்ட் மாநிலத்துக்கு காரில் சென்றார். அவரது இரண்டு நாள் பயணத்தில் செய்தி சேகரிக்க, பத்திரிகையாளர்களும் ஐந்து காரில் அழைத்துச் செல்லப்பட்டனர். காலை 10:00 மணிக்கு, ஹரித்வார் நகருக்கு சில கி.மீ., முன்னதாக, முதல்வரின் வாகனத் தொடரணியில் இருந்த ஒரு கார் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால், பின்னால் வந்த பத்திரிகையாளர்கள் இருந்த ஐந்து கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதின. பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாத நிலையில், சற்று நேரத்தில் கார்கள் புறப்பட்டுச் சென்றன.