திருப்பூர்: திருப்பூர், எஸ். பெரியபாளையம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.
ஊத்துக்குளி ஒன்றியம் எஸ். பெரியபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள, நுாற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில் இருப்பது போல், இங்குள்ள பெருமாள் கோவிலிலும், கோவில் கருவறை சுவர்களில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ‘ஏக காலத்தில் பிற்கால பாண்டிய மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டு இருக்கலாம்’ என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோவில் புனரமைக்கப்பட்டு, திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. முன்னதாக, பட்டாச்சாரியார்கள் நான்கு கால யாக சாலை பூஜை செய்தனர். நாலாயிர திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட விஷ்ணு கீர்த்தனைகளை பாராயணம் செய்து பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.