பதிவு செய்த நாள்
11
ஜூன்
2025
01:06
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மைக்கன் மாரியம்மன் மகேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத விழாவில் மஞ்சள் நீராட்டு விழாவும், மறு பூஜையும் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை சந்தை கடை வளாகத்தில், மிகவும் பழமை வாய்ந்த மைக்கண் மாரியம்மன் மகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. கம்பம் நடும் விழாவும், பக்தர்கள் அழகு குத்தி ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இருந்து அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு படைத்தனர். விழாவில் கம்பத்தை சுற்றி ஆண்கள், பெண்கள், இளைஞர், இளம்பெண்கள் ஆகியோர் தினமும் கம்பத்து ஆட்டம் ஆடினர். விழாவில் மேட்டுப்பாளையம் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில், சிவபாலமுருகன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். இந்த விழாவில் மேட்டுப்பாளையம் நந்தவனம் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுகுமார், பொருளாளர் குமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழா நிறைவு பூஜையாக காலையில் மஞ்சள் நீராட்டும், மாலையில் அபிஷேக அலங்கார மறுபூஜையும் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சிவமூர்த்தி, அறங்காவலர்கள் சக்திவேல், பத்மாவதி குமாரசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.