பதிவு செய்த நாள்
11
ஜூன்
2025
12:06
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68வது மடாதிபதி மஹா சுவாமிகள் என அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 132வது ஜெயந்தி மகோத்சவம், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்றது. கடந்த 8ம் தேதி துவங்கி, வேதபாராயணம், வித்வத் சதஸ், உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், இசை கச்சேரி உள்ளிட்டவை தினமும் நடந்தது. மூன்று நாட்களிலும், வேதபாராயணம் செய்த 40க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்களுக்கும், கிராம கோவில்களில் பணிபுரியும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் உள்ளிட்ட 514 பேருக்கும் சன்மானம் மற்றும் புத்தாடையை மடத்தின் மூத்த மேலாளர்சுந்தரேச அய்யர் வழங்கினார். நேற்று காலை, மஹா ருத்ர ஜபம், ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் கலசாபிஷேகமும், மலர் அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.. மஹா சுவாமிகள் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜெயந்தி மகோத்சவத்தையொட்டி சங்கரா பல்கலை, சார்பில், மருத்துவர் சாய்நாதன் தலைமையில் இலவச பொது மருத்துவ முகாமும், காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி ஜீவானந்தம் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு, தேரோட்டம் நடந்தது. தங்க தேரில், மஹாபெரியவர் விக்ரகத்தை எழுந்தருளச் செய்து ராஜவீதிகளில் பவனி வந்தது. மாண்டலின் வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் சல்லா.விஸ்வநாத சாஸ்திரிகள், மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.