பதிவு செய்த நாள்
11
ஜூன்
2025
05:06
வாலாஜாபாத்; சங்கராபுரம், சுயம்பு முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவ விழா விமரிசையாக நேற்று நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியம், சங்கராபுரத்தில் சுயம்பு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 2023ல் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, மூன்றாம் ஆண்டு விழா இன்று நடந்தது. விழாவின் போது, அம்மனுக்கு ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக இரண்டரை அடி உயரம் கொண்ட புதிய பஞ்சலோக அம்மன் சிலைக்கு கண் திறந்து, பிரதிஷ்டை நடைபெற்றது. இதையடுத்து, காலை 11:00 மணிக்கு, பல வகையான பொருட்களை கொண்டும், அம்மன் சிலை மீது மஞ்சள் நீர் ஊற்றியும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாதந்தோறும், அமாவாசை நாட்களில், இக்கோவிலில் ஊஞ்சல் உத்சவ விழா நடத்த கிராமத்தினர் தீர்மானித்துள்ளனர்.