பதிவு செய்த நாள்
11
ஜூன்
2025
05:06
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவிலில் நடந்த திருவிழாவில், பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில், புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு,ஆண்டுதோறும் திருநங்கைகள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில், உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், கொரோனா மற்றும் கோவில் புதுப்பிக்கும் பணி நடந்ததால், கடந்த ஐந்து ஆண்டாக திருநங்கைகள் திருவிழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு, திருநங்கைகள் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மஹாபாரதம், அர்ச்சுனன் துரோபதி திருக்கல்யாணம் சாமி வீதியுலாவும், விராட பருவம் என்னும் மாடு பிடி வைபவம் நடந்தது. சாமி வீதியுலா நிகழச்சிகள் நடந்தது. முக்கிய விழாவான நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் கோவிலை வலம் வந்து, கோவில் முன்பு பூசாரி கையால் தாலிக்கட்டிக்கொண்டனர். திருநங்கைகள், சாமி தரிசனம் செய்து விட்டு, ஆட்டம், பாட்டத்துடன் விடிய, விடிய கோவிலை வலம் வந்தனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, விழா குழுவினர்கள் மற்றும் கொத்தட்டை, சின்னக்குமட்டி, அத்தியாநல்லுார் கிராம மக்கள் செய்திருந்தனர் விழாவில் இன்று அதிகாலை தேரோட்டமும், அலங்கரிக்கப்பட்ட தேரில் வாண வேடிக்கையுடன் சாமி வீதியுலா காட்சியும், அரவாண் களப்பலி நிகழ்ச்சியும் நடந்தது.