ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே, கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரிஷிவந்தியம் அடுத்த முட்டியம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர்திருவிழா நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான விழா, கடந்த 4ம் தேதி சக்தி அழைத்தல், கொடி ஏற்றுதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 5 நாட்களுக்கு சுவாமி வீதியுலாவும், கடந்த, 10ம் தேதி திருநங்கைகள் தாலி கட்டிகொள்ளுதல், சுவாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று தேர்திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பொதுமக்கள் பொங்கல் வைத்து சுவாமி வழிபாடு செய்த பிறகு தேர்திருவிழா துவங்கியது. பொதுமக்கள் மற்றும் திருநங்கைகள் தேரினை முக்கிய தெருக்கள் வழியாக வடம் பிடித்து இழுத்து சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.