பதிவு செய்த நாள்
17
ஜூன்
2025
12:06
துமகூரு மாவட்டத்தில் உள்ளது சம்பிகே கிராமம். இங்கு பல கோவில்கள் உள்ளன. அவை, பண்பாட்டு, பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. இந்த கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடராமசுவாமி கோவில். கோவிலின் மூலவராக லட்சுமி தேவியுடன், சம்பிகே ஸ்ரீனிவாசர் காட்சி அளிக்கிறார். இந்த கோவில் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு, கவுதம மகரிஷி குலத்தை சேர்ந்த பாஸ்கரர் என்ற பிராமணரால் நிறுவப்பட்டது. முன்னொரு காலத்தில், பாஸ்கரர், வியாச மகரிஷியின் தரிசனத்தை பெறுவதற்காக, இமயமலைக்கு சென்றார். வழியில் உள்ள பல புனித தலங்களுக்குச் சென்று நீராடி தன் பாவங்களை போக்கினார். அச்சமயத்தில், வெங்கடராமசுவாமி சிலையை அவர் கண்டெடுத்தார். அதை வைத்து பூஜை செய்துவிட்டு புறப்பட்டார் என புராணங்கள் கூறுகின்றன.
வழிபாடு
இதை மஹாராஜா ஹன்சத்வஜனின் மகன் சுதன்வன், நான்காம் நுாற்றாண்டில் வழிபட்டதாக புராணம் கூறுகிறது. இந்த கோவிலில், வைகுண்ட ஏகாதசி, ரதோத்சவம், பிரம்மோத்சவம் ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. அப்போது, உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, பல மாவட்டங்களை சேர்ந்தோரும் வருகின்றனர். ரத ஊர்வலங்கள் சிறப்பாக நடக்கும். அச்சமயத்தில், கோவில் வளாகம் திருவிழா கோலத்தில் இருக்கும்.
பக்தர்களின் வருகை
கோவிலில், நவகிரகங்கள், நாகராஜர், ஆதிசேஷர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உண்டு. தினமும் ஸ்ரீனிவாசருக்கு அபிஷேகம், பூஜைகள் விமர்சையாக நடக்கின்றன.
எப்படி செல்வது?
பஸ்: மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, பஸ் மூலம் துமகூரு பஸ் நிலையத்திற்கு செல்லவும். அங்கிருந்து பஸ், டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.ரயில்: கெம்பேகவுடா ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் மூலம் குப்பி ரயில் நிலையம் செல்லவும். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்