பதிவு செய்த நாள்
20
ஜூன்
2025
11:06
சின்னமனூர்; சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழாவின் துவக்க விழா ஜூன் 22ல் துவங்குகிறது. ஜூலை 2 வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்பர்.
தமிழகத்தில் மாணிக்கவாசகருக்கென தனி கோயில் சின்னமனூரில் மட்டுமே உள்ளது. சின்னமனூரிலிருந்து மார்க்கையன்கோட்டை செல்லும் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்களுக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா நிகழ்ச்சிகள் ஜூன் 22 முதல் துவங்குகிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு திரளான சிவனடியார்கள் பங்கு பெறும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் 11 நாட்களும் மாலை மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வீதி உலா வருவார். மாணிக்கவாசகர் இத்திருத்தலத்தில் மூன்று மூலவர்களாக இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வரபகவான், பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார் என்கின்றனர்.
ஆனி திருமஞ்சன விழாவின் ஒரு பகுதியாக மாணிக்கவாசகர் குரு பூஜை மற்றும், அன்று மாணிக்கவாசகர் சுவாமிகள் வீதி உலா வரும் ஜூன் 30 ல் நடைபெறும். அன்று அன்னதானமும் நடைபெறும். தொடர்ந்து ஜூலை முதல் தேதி ஆனி உத்திரம் மற்றும் நடராசருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஜுலை 2 ல் ஆனித் திருமஞ்சன திருவிழா நடைபெறும். இந்த ஆனித் திருமஞ்சன விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா, பரம்பரை அறங்காவலர் திருவாசகம் அண்ணாமலை மற்றும் சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.