பதிவு செய்த நாள்
25
ஜூன்
2025
05:06
திருப்புவனம்; கோயில் உண்டியலில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் கடந்த 2023, மே மாதம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு மத்திய ரிசர்வ் வங்கி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. அதன் பின் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பது குற்றம் என அறிக்கப்பட்டது. குறிப்பிட்ட அளவு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இன்று மடப்புரம் கோயிலில் ஒன்பது நிரந்தர உண்டியல்கள், ஒரு கோசாலை உண்டியல் ஆகியவை திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தங்கம், வெள்ளி பொருட்கள் துணை ஆணையர் சங்கர் தலைமையில் எண்ணப்பட்டன. உண்டியலிலில் வழக்கமாக தங்கம், வெள்ளி பொருட்கள், ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகள் இருப்பது வழக்கம், ஆனால் இன்று உண்டியலில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்று செலுத்தப்பட்டிருந்தது.
அதிகாரிகள் கூறுகையில் : 10 க்கும் மேற்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் என்றால் மத்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி அதற்கு ஏற்ப பணம் பெறலாம். ஒரே ஒரு நோட்டு என்பதால் பாதுகாப்பாக வைத்திருப்போம், என்றார். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுடன் அமெரிக்க டாலர்கள், சிங்கப்பூர், மலேசியா நாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியலில் 19 லட்சத்து 20 ரூபாய் ரொக்கம், 183 கிராம் பல மாற்று பொன் இனம், 160 கிராம் வெள்ளியும் கிடைத்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை உதவி ஆணையர்கள் கவிதா, கணபதி முருகன், ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கண்காணிப்பில் தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் ஈடுபட்டனர்.