பதிவு செய்த நாள்
04
ஜூலை
2025
10:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக ஜூலை 10ல் யாகசாலை பூஜை துவங்குகிறது. 150 சிவாச்சாரியார்கள் நடத்த உள்ளனர்.
இன்று (ஜூலை 4) மாலை 5:30 மணிக்கு பூர்வாங்க பூஜை நடக்கிறது. ஜூலை 10ல் யாகபூஜை துவங்கி ஜூலை 14 காலை வரை நடக்கிறது. யாகசாலையில் சுவாமிக்கு 25, சத்யகிரீஸ்வரருக்கு 9, கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு 9, கற்பக விநாயகருக்கு 5, துர்க்கை அம்மனுக்கு 5, ராஜகோபுரத்திற்கு 5, பரிவார தெய்வங்களுக்கு 17 குண்டங்களுமாக மொத்தம் 75 யாக குண்டங்களும், 40 வேதிகைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ராஜா, சொக்குசுப்பிரமணியம், சண்முகசுந்தரம் தலைமையில் 150 சிவாச்சாரியார்கள், 70 ஓதுவார்கள், 30 நாதஸ்வர கலைஞர்கள், 20 பேர் குருவேத பாராயணத்தில் பங்கேற்க உள்ளனர். சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு தங்க குடம், கற்பக விநாயகர், சண்முகர், துர்க்கை அம்மன், மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளி குடம், கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமானத்திற்கும், வல்லப கணபதி விமானத்திற்கு வெள்ளி குடம், 400 பித்தளை சொம்பு, 100 பித்தளைக் குடங்களில் புனித நீர் நிரப்பி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட உள்ளது. 96 வகையான மூலிகைகள், திரவியங்கள், ஒன்பது வகையான சமித்துகள் யாக பூஜையில் பயன்படுத்தப்பட உள்ளன. ஸ்கந்தகுரு வித்யாலயம் வேத பாடசாலை மாணவர்கள் சிவாச்சாரியார் குகன் தலைமையில் குடங்கள், சொம்புகளில் நுால் சுற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.