பதிவு செய்த நாள்
20
டிச
2012
11:12
நாகர்கோவில்: திருவாதிரைப் பெருவிழா வரும் 28ம் தேதி நடக்கிறது. மார்கழி மாதத்தில் வருவது திருவாதிரைப் பெருவிழா. ஆருத்ரா எனும் வடமொழிச் சொல் தமிழில் ஆதிரை எனத் திரிந்து வழங்குகிறது. திரு எனும் அடைமொழி சேர்த்து திருவாதிரை ஆயிற்று. ஆருத்ரா எனும் வடச்சொல்லுக்குச் சிவந்த நிறம் என்று பொருள். தூய தமிழில் திருவாதிரை நட்சத்திரம் செம்மீன் எனப்படும் வானத்தில் இயங்கும் நட்சத்திர மீன்களில் மிகப்பெரியது திருவாதிரை என்பது வானநூல் உண்மை. திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜப்பெருமானுக்கு விழா எடுப்பதற்கும் ஒரு தொடர்பு காரணம் உண்டு. ஆதிரை நட்சத்திரம் சிவந்த நிற நட்சத்திரங்களில் ஒன்று. செந்திறம் அதிக வெப்பத்தை நினைவுட்டுவதாகும். பேரொளியும், பெரு வெப்பமும் கொண்ட திருவாதிரை, ஒளி வடிவமாகிய சிவஜோதியை நினைவூட்டுவதும் பொருத்தமுடையதாகும். வானில் ஆதிரை நட்சத்திரம் இடையறாது மிகுந்த விசையுடன் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பது வானவியல் சாஸ்திரம். உலகம் இயங்க வேண்டி எப்பொழுதும் ஆடிக் கொண்டிருக்கும் நடராஜப்பெருமானுடன் தொடர்பு படுத்தியுள்ள சான்றோர்களின் அறிவு திறம் போற்றத் தக்கதே ஆகும். ராஜராஜசோழன், ரா÷ஜ்நதிரசோழன் போன்ற மன்னர்கள் மார்கழித் திருவாதிரை விழா நடத்த நிவந்தங்கள் (கொடை) வைத்துள்ள செய்தியைக் கல்வெட்டுக்கள் மூலம் காணமுடிகிறது.
மார்கழி மாதம் மிகப்பெரிய மிக புனிதமாக கருதப்படுகின்றது. இம்மாதம் பீடு உடைய மாதமாகும். பீடு என்றால் பெருமை என்று பொருள். வழக்கில் பீடை என்று வந்துவிட்டது வுருந்தத்தக்கதே ஆகும். மார்கழி மாதம் பெருமையுடைய (புனிதமுடைய) மாதமாகும். இஸ்லாமியர்கள் இம்மாதத்தில் நோன்பு இருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பிறந்தநாளை இம்மாதத்தில் கொண்டாடுகின்றனர். வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசி எனும் பெருவிழா இம்மாதத்தில் தான் வருகிறது. சைவர்களின் முக்கிய விழாவான திருவாதிரைப் பெருவிழாவும் இம்மாதத்தில் தான் வருகிறது. திருவாதிரை ஒருவாக்களி (ஒருவா - நீங்காத; களி-இன்பம்) திருவாதிரை நாளில் களி உண்பது வழக்கத்தில் வந்துவிட்டது. திருவாதிரை நாளன்று நடராஜப்பெருமானை தொழுது வணங்கினால், ஒருவா, நீங்காத இன்பம் (களி) பெறலாம் என்பது தான் உண்மையான பொருளாகும். பட்டினத்தடிகளாரின் கணக்கராக இருந்த சேந்தனார், தம் மனைவி மக்களுடன் சிதம்பரம் வந்து தங்கி விறகு விற்கும் தொழிலை மேற்கொண்டார். இதில் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு நாள்தோறும் ஒரு சிவனாடியாருக்கு உணவளித்து வந்தார். ஒரு சமயம் தொடர்ந்து பெய்த மழையால் வுருவாய் இல்லாமல் போயிற்று. கிடைத்த ஊதியத்தில் மாவினைக் கொண்டு களி செய்தார். சிவனாடியாரை எதிர்பார்த்து காத்து இருந்தார் சேந்தனார். சிவபெருமான் முதுமைப் பருவமுடைய அடியவராக சேந்தனார் வீட்டுக்குச் சென்றார். அன்புடன் சேந்தனார் அளித்த களியை உண்டு மகிழ்ந்தார். மிகுதியை தமது பழங்கந்தையில் முடிந்துக்கொண்டு பொன்னம்பலம் வந்தடைந்தார். இந்த நாள் திருவாதிரை நாளாக அமைகின்றது. மறுநாள் காலை நடராஜப்பெருமானின் கருவறையிலும், திருமேனியிலும் களி சிதறிக் கிடந்தது கண்டு யாவரும் திகைத்தனர். எமது அன்பிற்குரிய சேந்தனாரும் அவரது மனைவியாரும் அளித்த களியமுதம் இது என வான் வழியே அருளினார் பெருமானார். அன்று முதல் திருவாதிரை விழாவில் களியமுதம் படைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த ஆண்டு திருவாதிரை விழா வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் நடராஜப்பெருமானின் திருவடிகளைப் பணிந்து போற்றிப் பேரின்பம் பெறுவோம்.