நீலகிரி ஹரிக்கட்டு தானிய திருவிழா பரவசம் அடைந்த பக்தர்கள்
பதிவு செய்த நாள்
29
ஜூலை 2025 01:07
கோத்தகிரி; நீலகிரி மாவட்டத்தில் ஹிரோடைய்யா திருவிழாவை ஒட்டி, ஹரிக்கட்டு எனப்படும் தானிய திருவிழா, இன்று பரவசத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் வடுக சமுதாய மக்களில் குலதெய்வமான ஹிரியோடைய்யா திருவிழா நேற்று நடந்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடை திறக்கப்படும் வனக்கோவிலில், முதல் கன்று குட்டி ஈன்ற பசும்பால் கொண்டு, ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவில் ஒரு நிகழ்வாக, இன்று ஹரி கட்டு என்ற தானிய திருவிழா நடந்தது. வனப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மூங்கில் தழைகளை கயிராக நெய்து, கோதுமை தினையினை கோர்த்து, ஹக்க பக்க கோவிலில் கட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இப்பூஜை செய்வதால், விவசாய பயிர்கள் செழித்து, ஆண்டு முழுவதும் மக்களுக்கு உணவு பஞ்சம் இருக்காது என்பது, ஐதீகமாக உள்ளது. தொடர்ந்து, கிராம கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கல் தூணில், எள் மற்றும் பருத்திக் கொண்டு, நெய் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான, பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி, ஐயனை பரவசத்துடன் வழிபட்டனர். மண்டெ தண்டு : கோத்தகிரி பொரங்காடு சீமைக்கு உட்பட்ட . தாந்தநாடு தொட்டூரில், மண்டெதண்டு விழா சிறப்பாக நடந்தது. மாவட்டத்தில் உள்ள வெளி ஊர்களில் இருந்து, தாந்தநாடு கொட்டூருக்கு திருமணமாகி, முதல் ஆண் குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள் பெண்கள், கலாச்சார உடையுடன், பழங்கால ஆபரணங்களை அணிந்து, குழந்தையுடன் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொன்று தொட்டு நடந்து வரும் இவ்விழால், உறவினர்கள் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஹிரியோடைய்யா விழா நடைபெறும் கடநாடு, ஒன்னதலை, கக்குச்சி மற்றும் பனஹட்டி உள்ளிட்ட கிராமங்களில், பஜனை மற்றும் ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.
|