ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில், வெயிலுகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலையில் மண்டகப்படி நிகழ்வாக, விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்ற நிலையில், 7ம் நாள் நிகழ்வாக காமதேனு வாகனத்தில், விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக, மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்ற விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.