கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை, வரும் செப்., 4, 5, 6 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அத்தம் நாளான இன்று முதல், பத்து நாட்கள் பூக்கோலம் போடுவது வழக்கம். இந்த நிலையில் திருச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற வடக்குநாதர் கோவிலில், தெற்கு கோபுரம் "மாலை கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் போடப்பட்டுள்ளது. இதை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர். இந்த அமைப்பின் தலைமையிலான, 200க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, 60 அடி விட்டத்தில், 2000 கிலோ மலர்களால், இக்கோலத்தை தயாரித்துள்ளனர். செண்டு மல்லி, வாடா மல்லி, சாமந்தி ஆகிய பூக்கள் பூக்கோலத்திற்கு மேலும் வண்ணப்பொலிவூட்டின. இந்த பிரம்மாண்ட பூக்கோலம் முன் "செல்பி எடுக்கவும், கண்டு மகிழவும், காலை முதல் மக்கள் திரண்டு வந்திருந்தனர். இந்த அமைப்பு கடந்த 18 ஆண்டுகளாக, தொடர்ந்து அத்தப்பூக்கோலம்மிடுவதை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.