பதிவு செய்த நாள்
22
டிச
2012
02:12
இறைவன் கொடுத்த இயற்கையை காப்பது இன்றியமையாதது! சுயநலத்திற்காக அதை அழிக்க முற்படுவது சில மனிதர்களின் இயல்பு. இயற்கை தந்த கொடையாய் உள்ள தங்கள் ஊர் மலைகளை காக்க போராடும் சில மனிதர்களை சந்திக்கலாமா? மதுரையில் இருந்து நரசிங்கம்பட்டி, அங்கிருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ளது அரிட்டாபட்டி. கிராமத்து அடையாளங்களை தொலைத்து விட்டு நகரத்தின் மேல் பூச்சுக்களை தங்கள் மேல் பூசிக் கொண்டு இருக்கும் தற்போதைய கிராமங்களில் இருந்து மாறுபட்டு, ஒரு ஒரிஜினல் கிராமமாக இன்னும் உள்ளது இவ்வூர். கலிஞ்சமலை, நாட்டார்மலை, வயிற்றுபிள்ளான் மலை, ராமன் ஆய்வு (தற்போது ராமாயி)மலை, அகப்பட்டான் (ஆப்டான்) மலை, கழுகுமலை, தேன்கூட்டு மலை என ஏழு மலைகள் இங்குள்ளது. இம்மலைகளில் இருந்து ஓடி வரும் தண்ணீரை தேக்க மலையின் மீது மேல் தருமம், கீழே கொள்ளங்குளம், காமன்குளம் என சிறு நீர்த்தேக்கங்கள் உள்ளது. வெள்ளையர்களால் அமைக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கங்கள் இன்றும் இப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு வரப்பிரசாதமாக உள்ளது. மலையைச்சுற்றி 200க்கும் மேற்பட்ட ஊற்றுக்கள் உள்ளன. சிறிது மழை பொழிந்தால், இருக்கும் ஊற்று தண்ணீரை வைத்து நெல் அடித்து விடும் கில்லாடிகள் இம்மக்கள்.
தெய்வமாக வணங்கும் இக்கிரானைட் மலையை சிலர் கூறுபோட முயல, மலைப்பாதுகாப்பு சங்கம் அமைத்து, தொடர் போராட்டத்தை நடத்தி மலையை காப்பாற்றினர். தொடர்ந்து காப்பாற்றி வருகின்றனர். சங்கத்தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், பிராமி கல்வெட்டுக்கள், சமண படுகைகள், குடவறை கோயில்கள், மகாவீர் சிற்பங்கள் நிறைந்த இம்மலை தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ளது. எங்கள் உயிருக்கு மேலாக மதிக்கும் இம்மலையில் இருந்து ஒரு கல்லைக்கூட பெயர்க்க அனுமதிக்க மாட்டோம். செழுமையான இப்பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முயற்சிக்க வேண்டும், என்கிறார். பூசாரி வீரணன் கூறுகையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தொன்மைகளை நாம் பாதுகாக்க வேண்டும். பாரம்பரிய சின்னங்களை அழித்து சிலர் சம்பாதிக்க நினைப்பது, மகா பாவம். குடவறை கோயிலும், புடை சிற்பங்களும் ஒருங்கே அமையப்பெற்ற இவ்விடம் ஒரு புண்ணிய பூமி. தேன் கூட்டு மலையில் 12 மாதமும் வற்றாத முருகன் ஊற்று பாறைகளுக்கு இடையே உள்ளது. இவ்விடத்திற்கு வந்து, பார்த்து உணர்ந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு இது புரியும், என்கிறார். கோடிகளும் துச்சமென என எண்ணி, பாரம்பரியத்தை உயிர் மூச்சாக எண்ணும் சில வெள்ளந்தி உள்ளங்கள் இன்னும் கிராமங்களில் வாழ்வது எத்தனை நகர மாந்தர்களுக்கு தெரியும்?