பதிவு செய்த நாள்
24
டிச
2012
10:12
சபரிமலை: மண்டல பூஜை முடிந்து, சபரிமலை நடை, வரும், 26ம் தேதி இரவு, 10:00 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக, 30ம் தேதி மாலை திறக்கப்படும். சபரிமலை அய்யப்பன் கோவிலில், நவ., 16ம் தேதி துவங்கிய மண்டல காலம், நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரன்முளாவில் இருந்து, இம்மாதம், 22ம் தேதி புறப்பட்ட தங்க அங்கி பவனி, நாளை நண்பகலில், பம்பை வந்தடையும்.மாலை, 3:00 மணிக்கு, பெட்டியில் அங்கியை வைத்து, பக்தர்கள் சன்னிதானம் கொண்டு வருவர். சன்னிதானம் வந்தடையும் தங்க அங்கியை, மாலையில், கோவிலின் தலைமை பூசாரி பெற்று, அய்யப்பனின் விக்ரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்துவார்.வரும், 26ம் தேதி பகல், 12:30 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது. அன்று காலை, 11:00 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். மண்டல பூஜை நிறைவடைந்ததும், மதியம் மூடப்படும் கோவிலின் நடை, மீண்டும் மாலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டு, தீபாராதனை, அத்தாழ பூஜைக்கு பின், இரவு, 10:00 மணிக்கு மூடப்படும். அதன்பின், பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மகர விளக்குக்கான ஏற்பாடுகளும் நடைபெறும். மகர விளக்கு பூஜைக்காக, வரும், 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.