ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி; திருப்பவித்ரோத்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2025 01:09
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருப்பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் விழா 6ம் தேதி துவங்கியது. இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்தின் அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார். பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, படிப்பு கண்டருளி இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார்.