சித்தர் சுவாமிகள் நுழைவு வாயில்ஆண்டு விழாவில் அன்னதானம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2012 11:12
கும்பகோணம்: சீனிவாசநல்லூரில் ஓங்கார ஆசிரமத்தின் சற்குருசித்தர் சுவாமிகள் நுழைவு வாயிலின், 6ம் ஆண்டு விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில் சித்தர் சுவாமிகள் அவதரித்துள்ளார். மத்திய அரசு சித்தர் சுவாமிகளுக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. சற்குருசித்தர் சுவாமிகளின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் பொழுது, சுவாமிகள் அவதரித்த சீனிவாசநல்லூரில் ஓங்கார ஆசிரமத்தின் சார்பில், சற்குருசித்தர் சுவாமிகள் நூற்றாண்டு நுழைவு வாயில் ட்டப்பட்டுள்ளது.சற்குருசித்தர் சுவாமிகளின் நூற்றாண்டு நுழைவு வாயிலின், 6ம் ஆண்டுவிழா நேற்று நடந்தது. இதையொட்டி ஓங்கார ஆசிரமத்தின் தலைவர் சுவாமி ஓங்காரநந்தா சீனிவாசநல்லூருக்கு நேற்று காலை வந்தார். சீனிவாசநல்லூரில் உள்ள சித்தர்சுவாமிகள் பீடத்தில், 1,008 நாமாவளியை தொடர்ந்து, சிறப்பு ஆராதனை நடந்தது. முன்னதாக உமாமகேஸ்வரனார் கோவிலிலும், கருப்பசாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின் காலை 7 மணிக்கு நுழைவு வாயிலில் பூஜை நடந்தது. நூற்றாண்டு நுழைவு வாயில் அருகில் சுவாமி ஓங்காரநந்தா சிறப்பு பூஜைகளை செய்தார். பின் நேற்று ஒரு நாள் முழுவதும் வழங்கப்படும் அன்னதானத்திட்டத்தை சுவாமி ஓங்காரநந்தா பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார். நிகழ்ச்சியில் ஓங்கார ஆசிரம செயலாளர் கோடீஸ்வரன், சர்வாத்மநந்தா, கருணாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.