பதிவு செய்த நாள்
25
டிச
2012
11:12
கும்பகோணம்: சாரங்கபாணி ஸ்வாமி கோவிலில் நேற்று நடந்த வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மையும் பழமையும் வாய்ந்த, வரலாற்று சிறப்புடையதாக, கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் திகழ்கிறது. ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருக்கோவில். திருமழிசையாழ்வாருக்கு நேரில் காட்சி தந்து, அவரது வேண்டுகோளுக்கிணங்கி, சயனித்துள்ள மூலவர் சாரங்கபாணிசுவாமி சற்று எழுந்திருக்கும் நிலையில், உத்தான சாயியாய் கருவறையில் எழுந்தருளிய தலம் என்ற சிறப்பு பெற்றது.108 திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருப்பதி தலத்துக்கு அடுத்து, மூன்றாவது சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இக்கோவில்திகழ்கிறது. இங்கு பெருமாள் வைகுண்டத்திலிருந்து, அவர் எழுந்தருளியுள்ள ரதத்துடனேயே இங்கு தங்கிவிட்டார் என்பதற்கு அறிகுறியாக, அவரது கர்ப்பகிரகம் யானை குதிரைகளுடன் கூடிய உருவத்தில் அமைந்திருக்கிறது.இதனாலேயே இத்திருத்தலம் நித்ய வைகுண்டம், பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. இக்கோவிலே வைகுண்டமாக கருதப்படுவதால், இங்கு தனியாக சொர்க்கவாசல் என்பது கிடையாது. இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற, இக்கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா ந டந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை, 3 மணிக்கு விசுவரூப தரிசனத்துடன் விழா துவங்கியது.ஆராவமுதன் முத்தங்கி சேவையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து மலர் மாலைகள் வரவழைக்கப்பட்டு அணிவிக்கப்பட்டன. கோவில் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டும், சேவார்த்தி மண்டபத்தில் பக்தர்கள் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.