திருப்பூரில் நவராத்திரி கொண்டாட்டம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2025 01:09
திருப்பூரில் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது; வடமாநில மக்களும், தங்கள் பாரம்பரிய வழக்கப்படி, துர்காபூஜை என்ற பெயரில் பக்திபரவசத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
திருப்பூர் மாநகர பகுதியில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் வசிக்கின்றனர்; அதேபோல், நமது நாட்டில் உள்ள, 21 மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வசிப்பதால், அவரவர் வழக்கப்படி, பாரம்பரிய பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த, 22 ம் தேதி முதல் நவராத்திரி விழா களைகட்டிக்கொண்டிருக்கிறது. திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில்,தினமும் சிறப்பு பூஜையும், கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மீனாட்சி திருக்கல்யாண கோலம், மஹாசதாசிவ மூர்த்தி சுவாமி உருவங்களை செய்து, நவராத்திரி வழிபாடு நடந்து வருகிறது.
இதேபோல், கோவில்கள் மற்றும் வீடுகளில், நவராத்திரி கொலு வழிபாடும் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. வரும், 1 ம் தேதி சரஸ்வதி பூஜையும், 2 ம் தேதி விஜயதசமி விழாவும் நடக்க உள்ளது. இந்நிலையில், நவராத்திரியின் ஆறாவது நாளான நேற்றும், கொலு வழிபாடு சிறப்பாக நடந்தது.
வடமாநில மக்கள், அந்தந்த மாநில பாரம்பரிய வழக்கப்படி, துர்கை, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகர் சிலைகளை செய்து, தினமும் வழிபாடு செய்து வருகின்றனர். அதன்படி, திருப்பூரில் துர்கா பூஜையும் விமரிசையாக நடந்து வருகிறது.