திருக்கோவிலூர், தபோவனத்தில் அமைந்துள்ள ஞானானந்தகிரி சுவாமிகளின் அதிஷ்டான வளாகத்தில் சரத் நவராத்திரி விழா கடந்த 22 ஆம் தேதி துவங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று காலை 5:30 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் ஸ்ரீ மகாமேருவிற்கு லட்சார்ச்சனை, சக்ரநவாவரண பூஜை, சுவாசினி பூஜை நடந்தது. மாலை 5:30 மணிக்கு துர்கா சப்தசதி பாராயணம், லலிதா சகஸ்ரநாம குங்குமார்ச்சனை, ஸ்ரீவித்யா நவாவரண ஸ்ரீ சக்கர பூஜை ஞானாம்பிகைக்கு கார்த்தியாயினி அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 1ம் தேதி மதியம் 12:00 மணிக்கு நவசண்டி ஹோமம், பூர்ணாகுதி, 2ம் தேதி சுஹாசினி பூஜை, தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை, லட்சாட்சனை பூர்த்தி, அதிர்ஷ்டானத்தில் கட அபிஷேகம், மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.