ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 22ல் சபரிமலை வருகை பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2025 05:10
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலை வருவதாக இருந்தது. பம்பையில் இருந்து நடை பயணமாக சன்னிதானம் வருவார் என்றும் ஒருநாள் சபரிமலையில் தங்கி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஏற்றார் போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 22- ம் தேதி அவர் சபரிமலை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 -ம் தேதி கொச்சி வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார். பின்னர் அங்கிருந்து பம்பை சென்று சன்னிதானத்துக்கு செல்கிறார். அதன்பின்னர் தொடர்ந்து 24ஆம் தேதி வரை கேரளாவில் தங்கி இருந்தே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். ஜனாதிபதியின் சபரிமலை வருகையை ஒட்டி பாதுகாப்புபணிகள் தொடங்கியுள்ளது. ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 17- ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. 18 - ம் தேதி காலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் தொடங்கும். அன்று காலை அடுத்த மண்டல காலம் முதல் ஒரு ஆண்டுக்கான மேல் சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெறுகிறது. சபரிமலையில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது 17- ம் தேதிக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 22- ம் தேதி வரையிலான முன்பதிவு அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து தேவசம்போர்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள்வந்த பின்னர் அவர்களுடன் ஆலோசித்து எத்தனை நாட்கள் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்த வேண்டும் என்பதை முடிவு செய்த பின்னர் மீதமுள்ள நாட்களுக்கு ஆன்லைன் முன்பதிவு அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.