சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ தீர்த்த சுவாமிகள் புதுடில்லியில் விஜய யாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2025 11:11
புதுடில்லி; வட இந்தியாவில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் இன்று நவம்பர் எட்டாம் தேதி) மாலை 7 மணிக்கு புதுடில்லி வந்தடைந்தார். இம்மாதம் 30ம் தேதிவரை நடைபெறும் விஜய யாத்திரையில் புது டில்லி வசந்த் விஹார், பச்சிம் மார்கில் அமைந்துள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்ரீ சங்கர வித்யா கேந்த்ராவில் தங்கி பல்வேறு பொது நிகழ்ச்சிகள், கும்பாபிஷேகம் முதலிய வைபவங்களில் கலந்து கொண்டு, மதுரா, பிருந்தாவன் ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளார்.
இவ்வளாகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ சாரதாம்பாள் ஸ்ரீ கணபதி சன்னதிகள் அமைந்துள்ளன. 20.11.1966ம் ஆண்டு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ அபினவ வித்யா தீர்த்த மஹா சுவாமிகளின் முன்னிலையில் அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணனால் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கிரீஸ் நாட்டின் ராணி ப்ரெடெரிக்கா மற்றும் இளவரசி ஐரீன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 22.6.1967ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
1977ம் ஆண்டு ஏப்ரல் 16 முதல் மே மாதம் 23ம் தேதி வரை சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ அபினவ வித்யா தீர்த்த மஹாசுவாமிகள் மற்றும் தற்போதைய 36வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசன்னிதானம் ஆகியோர் விஜயம் செய்து ஸ்ரீ சங்கர ஜயந்தி உற்சவத்தினை நிகழ்த்தினர். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இதில் அமைந்துள்ள நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அன்றைய மத்திய அமைச்சர் ஜக்ஜீவன் ராம், மஹரிஷி மகேஷ் யோகி ஆகியோர் சுவாமிகள் இருவரையும் தரிசனம் செய்து ஆசி பெற்றனர்.
1982ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி மீண்டும் இரு ஆசார்ய சுவாமிகளும் புதுதில்லி விஜயம் செய்து செப்டம்பர் 5ம் தேதி வரை தங்கி தங்களது சாதுர் மாஸ்ய விரதத்தினை அனுஷ்டித்தனர். அன்றைய ராணுவ அமைச்சர் வெங்கட்ராமன் மலைமந்திரில் சுவாமிகளுக்கு வரவேற்பு அளித்தார். அதில் பல்ராம் ஜாக்கர், எஸ்.எல்.குரானா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 1994ம் ஆண்டு தற்போதைய 36வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசன்னிதானம் மீண்டும் தமது சாதுர்மாஸ்ய விரதத்தினை நடத்தினார்.
1966ம் ஆண்டு டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், 1994ம் ஆண்டு சங்கர் தயாள் சர்மா ஆகியோர் ஜனாதிபதியாக இருந்த போது ராஷ்ட்ரபதி பவனுக்கு ஸ்ரீ சுவாமிகளை அழைத்து அனுக்ரஹம் பெற்றனர். பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போதும் பிரதம மந்திரியின் இருப்பிடத்திற்கு ஸ்ரீ சுவாமிகளை அழைத்து மரியாதை செய்தார். 31 வருடங்களுக்குப்பின் தற்போது ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் அவர்கள் விஜயம் செய்துள்ளார். இதற்கான ஏற்பாட்டினை ஸ்ரீ சங்கர வித்யா கேந்த்ராவின் தலைவர் எஸ்.லக்ஷ்மி நாராயணன் மற்றும் செயலர் நடராஜன், ஸ்ரீ மடத்தின் தலைமை அதிகாரி பி.ஏ.முரளி, அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் என்.வெங்கடராமன் உள்ளிட்ட கமிட்டி அங்கத்தினர் செய்துள்ளனர்.