சிவகாசி : சிவகாசி சிவசுப்பிரமணியசாமி கோயிலில் நடந்த, திருவாதிரை விழா ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயிலில் திருவாதிரை பெருந்திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிசம்பர் 28ஆருத்ரா தரிசனம் நடந்தது. சிவன் கோயில், சிவசுப்பிரமணியசாமி கோயில்களில் இருந்து நடராஜர், சிவகாமி அம்பாளும், கடைக்கோயிலில் இருந்து பத்திரகாளியம்மன், மாரியம்மன் ஆகியோர் மஞ்சள் பூ அலங்காரம் செய்யப்பட்ட தேர்களில் வீற்றிருந்து, வீதி உலா வந்தனர்.மூன்று தேர்களும் தெற்கு ரதவீதியில் ஒரே இடத்தில் நிற்க, சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பெண்கள் சுவாமியை வழிபட்டு, மார்கழியில் அதிகம் பூக்கும் செவ்வந்தி பூ மலர்களை சூடினர். இதன் பின் சுவாமிகள் ரதவீதிகளில் வீதி உலா வந்து, நிலைக்கு வந்தது.