காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வரும் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது. வழக்கமான நடைமுறைப்படி அடுத்த 12வது நாளான வரும் ஜன., 10ம் தேதி, காஞ்சிபுரம் செவிலிமேடில் உள்ள ராமானுஜர் கோவிலில், அனுஷ்டான குளம் உத்சவ விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ராமானுஜருடன், பிற்பகல் 12:00 மணிக்கு எழுந்தருள்கிறார். அதை தொடர்ந்து, கிணறு தீர்த்தத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. பின், மாலை 3:00 மணிக்கு வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன், வேடுவர் அலங்காரத்தில் பக்தர் க ளுக்கு அருள்பாலிக்கிறார். மஹா தீபாராதனை முடிந்ததும், பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு, துாப்புல் வேதாந்த தேசிகர் கோவிலுக்கு செல்வார். அங்கு பெருமாளுக்கு மரியாதை செலுத்தியபின், வரதராஜ பெருமாள் கோவில் சென்றடைவார். அனுஷ்டான குளம் உத்சவத்தையொட்டி, செவிலிமேடு ராமானுஜர் கோவில் வளாகம் முழுதும் சுத்தம் செய்யப்பட்டு, சுற்றுச்சுவருக்கு வர்ணம் தீட்டப்பட்டு கோவில் புதுப்பொலிவு பெற்று வருகிறது.