குதிரை வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள்: கனுப்பாரி உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2026 11:01
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாட்டு பொங்கல் விழாவில் அழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கனுப்பாரி உற்சவம் நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ள நிலையில், ஆண்டு முழுவதும் பரமபத வாசல் வழியாகவே பக்தர்கள் தரிசிக்கின்றனர். இங்கு மார்கழி மாதம் பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. நேற்று அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளினார். அப்போது கிருஷ்ண அவதாரத்தில் பசு மாடுகளை மேய்க்க சென்ற லீலையில் பெருமாள் வீதிவலம் வந்தார். இதனால் கால்நடைகள் சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை. காலை 10:30 மணிக்கு புறப்பட்ட பெருமாள் மாலை திருக்கோயிலை அடைந்தார். பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். இரவு பாகவதர்கள் பஜனை பாடிய நிலையில் மகாதீப ஆராதனைகள் நடந்து விழா நிறைவடைந்தது.